ஆஸி, டெஸ்ட் தொடர்
கடைசியாக 3 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை ஒரு முறை கூட ஆஸ்திரேலிய அணியால் வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியோ கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இழக்காமல் அசுர பலத்துடன் களமிறங்கவுள்ளது. இதனால் இந்த முறை வரலாறு மாற்றி அமைக்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
விராட் கோலியின் பசி
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த முறை அச்சுறுத்தலாக இருந்தது ரிஷப் பண்ட் மட்டும் தான். இந்த முறை அவர் இல்லையென்றாலும் விராட் கோலி புதிய எமனாக வந்து நின்றுள்ளார். ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்த அவர், டி20யை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் தாண்டவம் ஆடி வருகிறார். அவரின் அடுத்த டார்கெட் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் தான்.
எப்படி சமாளிக்கலாம்
இந்நிலையில் கோலியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் யோசனை கூறியுள்ளார். அதில், விராட் கோலியை விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பந்துவீசவே வீசாதீர்கள். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வீசுவதை போன்றே அவரையும் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நெருக்கடி கொடுக்க முடியும்.
சிரம பட வேண்டும்
விராட் கோலியை முதல் பந்தில் இருந்தே சிரமப்பட வைக்க வேண்டும். ஒரு சிங்கிள் ரன் அடித்தாலும் கூட அவர் மிகவும் ரிஸ்க் எடுத்து தான் ஆட வேண்டும் என்ற சூழலை உருவாக்குங்கள். விக்கெட் எடுப்பதை விட, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது வித்தியாசமாக இருக்கும். இதனை பவுலர்கள் நன்கு அறிவார்கள். விராட் கோலியை ரன் அடிக்க விடாமல் அதிக ரிஸ்க் எடுக்க வைத்தாலே அவுட்டாக்கிவிடலாம்.
மன பலம்
கோலி ஆக்ரோஷமான வீரர். நீண்ட நேரம் ரன் அடிக்கவில்லை என்றால் நிச்சயம் கோபத்தில் ரிஸ்க் எடுப்பார். அப்போது அவுட்டாவார். தயவு செய்து தவறான பந்தை மட்டும் வீசி அவரை ரன் அடிக்க விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் மன பலத்தில் யார் வெல்வார் என்பது தான் இங்கு போட்டியே என ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.