இலங்கை தொடரில் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முன்னதாக 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் மோதிய இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டுள்ளது.
426 ரன்கள் குவிப்பு
இந்த தொடரின் இரு போட்டிகளிலும் கேப்டன் ஜோ ரூட் 426 ரன்களை குவித்ததுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்சில் இரட்டை சதத்தையும் 2வது இன்னிங்சில் சதத்தையும் அடித்து அதகளம் புரிந்துள்ளார் ரூட். இதன் சராசரி 106.50.
ஜோ ரூட் முறியடிப்பார்
இந்நிலையில தன்னைவிடவும் டேவிட் கோயர், கெவின் பீட்டர்சன்னை விடவும் அதிக ரன்களை அடிப்பது மட்டுமின்றி முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிக ரன்களை ஜோ ரூட் குவிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து துவக்க வீரர் ஜெஃப்ரி பாய்காட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு இருக்கும் திறமைக்கு 200 டெஸ்ட் போட்டிகளை கடந்து அவர் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார்.
8,249 ரன்கள்
தற்போது 30 வயதாகும் ஜோ ரூட் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8249 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஸ்கோரான 15,921 ரன்களை அவர் தாண்டி சாதனை புரிவார் என்று பாய்காட தெரிவித்துள்ளார்.
ஒப்பிட வேண்டாம் என கோரிக்கை
ஆயினும் முன்னாள் வீரர்களுடன் ஜோ ரூட்டை ஒப்பிடுவதில் பாய்காட்டிற்கு நம்பிக்கை இல்லை. அவர் தன்னுடைய தலைமுறையில் தன்னுடன் ஆடிவரும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருடனே ஒப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.