வெ.இண்டீஸ் வீரர்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மிக குறுகிய நாட்களிலேயே மாறினார் ஜோப்ரா ஆர்ச்சர். பார்படோஸ் என்ற நாட்டை சேர்ந்த அவர் அங்கேயே இருந்து இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் தான் ஆடி இருக்க வேண்டும்.
இனவெறி
ஆனாலும், அவர் இங்கிலாந்து அணியில் ஆட ஆசைப்பட்டு இங்கிலாந்து வந்தார். பல ஆண்டுகள் உள்ளூர் அணியில் ஆடி பின் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு பெற்றார். கருப்பினத்தை சேர்ந்த அவரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து இனவெறியை தூண்டும் வகையில் சிலர் சீண்டி வருகின்றனர்.
பரபரப்பு
கடந்த காலங்களில் ஆர்ச்சர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை நியூசிலாந்து தொடரின் இடையே அளித்த பேட்டியில் ரசிகர் கூட்டத்தில் சிலர் தன்னிடம் இனவெறியுடன் பேசியதாக கூறி இருந்தார். அப்போது அது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதங்கம்
நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் குறிப்பிட்ட ரசிகர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னும் சமூக வலைதளங்களில் இனவெறியர்களை எதிர்கொண்டு வந்தார் ஆர்ச்சர். அவ்வப்போது சில மோசமான பதிவுகளை பகிர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்.
கால்பந்து வீரருக்கு மிரட்டல்
சமீபத்தில் கிறிஸ்டல் பேலஸ் என்ற கால்பந்து அணியை சேர்ந்த வீரர் வில்பிரையிட் ஸாஹாவிற்கு 12 வயது சிறுவன் இனவெறியுடன் பதிவிட்டு மிரட்டல் விடுத்து சிக்கினான். அதைத் தொடர்ந்து ஆர்ச்சர் தானும் நடவடிக்கையில் இறங்க முடிவு செய்தார்.
புகார்
இந்த நிலையில், ஐந்து நாள் தனிமையில் இருந்த போது அவதூறாக, இனவெறியாக வந்த பதிவுகளை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்வாகத்தின் பார்வைக்கு வைத்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.
எல்லை மீறினால்..
"வில்பிரையிட் ஸாஹா 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் நான் ஒரு கோடு போட்டுக் கொண்டுள்ளேன். எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். என் புகார்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி உள்ளேன். இது சரியான நடைமுறையில் செல்லும்" என தன் புகார் பற்றி தெரிவித்தார் ஆர்ச்சர்.