சாம் கர்ரன் அபாரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வெற்றியை மிகவும் எளிதாக பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட இந்திய அணியின் நினைப்பை தவிடு பொடியாக்கினார் இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரன்.
மீட்ட சாம் கர்ரன்
இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது களமிறங்கிய சாம் குர்ரான், தனது நிதானமான மற்றும் புத்திசாலித்தனமான ஆட்டத்தால் அணியை மோசமான தோல்வியில் இருந்து மீட்டார். நேற்றைய போட்டியில் கர்ரன் அவுட்டாகாமல் 95 ரன்களை எடுத்திருந்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
கணிசமாக உயர்ந்த ரன்கள்
நேற்றைய போட்டியில் விக்கெட்டுகளை குவித்த புவனேஸ்வர் குமாரின் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு தவிர்த்த கர்ரன், மற்றவர்களின் பந்துகளை அனாவசியமாக அடித்து ஆடினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அவர் அணியை வெற்றி பெற செய்துவிடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஏன் இந்திய அணியின் வீரர்களுக்கே அந்த கவலை காணப்பட்டது.
ஜோஸ் பட்லர் பாராட்டு
இந்நிலையில் சிஎஸ்கே வீரரான சாம் கர்ரனுக்கு அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் திறமை காணப்படுவதாகவும் அவர் இதுகுறித்து எம்எஸ் தோனியிடம் தொடர்ந்து பேசி ஆலோசனை பெற வேண்டும் என்றும் இங்கிலாந்தின் தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டு தெரிவித்துள்ளார். தோனியை போலவே சிறப்பான பினிஷராக சாம் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020ல் சிறப்பு
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சாம் கர்ரனை, அணியின் கேப்டன் தோனி சிறப்பாக பயன்படுத்தினார். அவரை பௌலிங்கில் மட்டுமின்றி, துவக்க வீரராகவும், சிறப்பான பினிஷராகவும் தோனி பயன்படுத்தினார். சிஎஸ்கேவில் விளையாடியதன் மூலம் தன்னுடைய ஆட்டம் சிறப்பாக மாற்றியுள்ளதாக முன்னதாக கர்ரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.