28வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களை குவித்துள்ளது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார்.
பட்லர் -சாம்சன் அதிரடி
முதலில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் எடுத்த எடுப்பில் அதிரடியை துவக்கவில்லை. அவருடன் இணைந்து விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரஷீத்கான் பந்து வீச்சில் அவுட்டாக அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதையடுத்துதான் ராஜஸ்தானின் சிறப்பான ஆட்டம் துவங்கியது. பட்லர் மற்றும் சாம்சன் இருவரும் மரண அடி அடித்தனர்.
124 ரன்கள்
இதையடுத்து அந்த அணியின் ரன்கள் 150ஐ தாண்டியது. தனது 39வது பந்தில் அரைசதத்தை அடித்திருந்த பட்லர், 56 பந்துகளில் சதத்தை எட்டினார். தொடர்ந்து 64 பந்துகளில் 124 ரன்களை குவித்தார். அவரது அதிரடியில் 11 பவுண்டரிகளும் 8 சிக்ஸ்களும் தெறித்தன.
தெறிக்க விட்ட பட்லர்
இந்த ஐபிஎல் 2021 தொடரின் மூன்றாவது சதம் இதுவாகும். அவர் ஆடிய இறுதி 13 பந்துகளில் 4 சிக்ஸ்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார். குறிப்பாக சந்தீப் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸ்களையும் ஒரு பவுண்டரியையும் பறக்க விட்டார். ஆனால் அதே ஓவரில் அவுட்டானார்.
சிக்ஸ் அடித்த மில்லர்
அடுத்தடுத்து ஆடிய ரியான் பராக் மற்றும் டேவிட் மில்லர் முறையே 15 மற்றும் 7 ரன்களை அடித்திருந்தனர். டேவிட் மில்லர் இறுதி பந்தில் சிக்ஸ் அடித்தார். இதையடுத்து அந்த அணியின் ஸ்கோர் 220ஆக இருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு 221 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.