நாட்டிங்காம்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளார். அவர் மீது இருந்த வழக்கு அவருக்கு சாதகமாக முடிந்த நிலையில், அவர் பெயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், களத்தில் ஆட இருக்கும் பதினோரு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார் ஜோஸ் பட்லர். இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியோ மோசமான தோல்வியை சந்தித்து, எந்த வீரரும் சரியாக திறமையை வெளிப்படுத்தாத துக்கத்தில் இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தான், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அடுத்த போட்டிக்கான அணித்தேர்வு குறித்து பேசியுள்ளார். அப்போது சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் இருவரும் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர். இரண்டாவது போட்டியில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் வந்து விட்டார். இதனால், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் யாரை எடுப்பது என்ற தலைவலி வந்துள்ளதாக கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் புதிய வீரர். அவர் முதல் போட்டியில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ்-க்கு மாற்று வீரராக இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டவர். அந்த போட்டியில் சதம் அடித்தும், விக்கெட்களை வீழ்த்தியும் தன் திறமையை நிரூபித்தார். மறுபுறம், பென் ஸ்டோக்ஸ் திறமையான ஆல்-ரவுண்டர். சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் கொண்டவர். மற்ற வீரர்கள் அனுவப வீரர்கள் என்பதால், யாரை விடுவது, யாரை எடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பும்ரா அடுத்த போட்டியில் ஆட இருப்பது ஒன்று மட்டுமே ஆறுதல் அளிக்கும் செய்தி. மற்றபடி, இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் ஒழிய, மூன்றாவது போட்டியை வெல்வது கடினம்.