வெள்ளிக்கிழமை துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டித் தொடர்கள் நாளை மறுதினம் முதல் துவங்கி ஜனவரி 19ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதற்கென இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018-19 டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் தற்போது இந்த தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது.
மரியாதை உள்ளது
இந்நிலையில் இந்திய பௌலர்களிடம் மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அவர்களின் பௌலிங் ஆர்டர் மிகவும் சிறப்பானது என்றும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கும் சவால்கள் அனைத்தையும் ஏற்கனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தெரிந்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறப்பான கூட்டணி
தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான சோனிக்கு அளித்த பேட்டியில் பேசிய லாங்கர், இந்திய அணியின் உலகத்தரத்திலான பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா என்று கூறியுள்ளார். அவருடன் முகமது ஷமி இருவரும் சிறப்பான கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் மற்றும் சில தொடர்களில் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பானது என்றும் கூறினார்.
கவலை கொள்ளவில்லை
இந்த தொடரில் ரோகித் மற்றும் இஷாந்த் இல்லாதது குறித்தெல்லாம் தாங்கள் கவலை கொள்ளவில்லை என்றும் மற்ற வீரர்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் தயாராகியுள்ளதாகவும் லாங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் பௌலிங் குழு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.