பண்ட்-ன் சொதப்பல்
டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வந்த ரிஷப் பண்ட், ஒருநாள் கிரிக்கெட்டிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்த 5 இன்னிங்ஸ்களில் அவரின் ஸ்கோர் 15, 125, 0, 56, 18 ரன்கள் தான் ஆகும். நடப்பாண்டில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 213 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இடதுகை வீரர் என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதால், சஞ்சு சாம்சன் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.
குவிந்து வரும் விமர்சனம்
சஞ்சு சாம்சன் இந்தாண்டு இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 179 ரன்களை அடித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் மிக முக்கியமான 37 ரன்களை அடித்திருந்தார். எனவே இனி வரும் போட்டிகளில் ரிஷப் பண்ட்-ஐ நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் பேச்சு
இதுகுறித்து பேசிய அவர், பண்ட் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை நாசமாக்கி வருகிறார். உலகக்கோப்பை வருகிறது. ஏற்கனவே நிறைய பேர் பண்ட் சொதப்புகிறார் எனக்கூற தொடங்கிவிட்டனர். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார். தேவையென்றால் பண்ட் சற்று ஓய்வு பெற்றுவிட்டு, அழுத்தம் ஏதுமின்றி சிறிது காலம் கழித்து வரலாம் எனக் கூறியுள்ளார்.
ஓய்வு எடுக்கலாம்
தொடர்ந்து பேசிய அவர், ரிஷப் பண்ட் தன்னை நிரூபிப்பதற்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்த 4 போட்டிகளிலும் அவரை களமிறக்கி ஏமாற்றமடைந்து, அதன்பின்னர் ஓய்வு தருவதற்கு தற்போதே தந்துவிட்டு செல்லலாம் என இந்திய அணி கேப்டன் தவான் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மணுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
4 போட்டிகள் என்னென்ன?
சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வுக்குழு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகளுக்கும் பண்ட்-ஐ தேர்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். நியூசிலாந்துடனான கடைசி போட்டி என மொத்தமாக பண்ட்-க்கு 4 போட்டிகளே இன்னும் மீதம் உள்ளன.