கோலி கேப்டன்சி
விராட் கோலி பல வெற்றிகளை குவித்த கேப்டனாக மாறி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சௌரவ் கங்குலி, தோனி பெற்ற வெற்றிகளை முறியடித்துள்ளார். ஆனாலும், அவர் அணியை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றிக் கொண்டே இருப்பது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
2019 உலகக்கோப்பை விமர்சனம்
2019 உலகக்கோப்பை தொடருக்கு முன் பல பரிசோதனைகளை செய்த பின்னும் இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் யார் என தெரியாத நிலை நீடித்தது. அரை இறுதியோடு இந்திய அணி தோல்வி அடைந்து திரும்பியதற்கு இந்திய அணியின் அணித் தேர்வும் காரணம் என கூறப்பட்டது.
விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட் தேர்வு
அதே உலகக்கோப்பை தொடரில் அதிக அனுபவம் இல்லாத விஜய் ஷங்கர் மற்றும் ரிஷப் பண்ட் பாதி தொடரில் அணியில் சேர்க்கப்பட்டதும் கடும் விமர்சனத்தை சந்தித்தது. அவர்கள் சரியாக செயல்படவில்லை. இவை எல்லாம் கேப்டன் கோலியின் மீதான விமர்சனமாக உள்ளது.
தோனிக்கு மாற்று வீரர்
உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், அவருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்தார் கோலி. ரிஷப் பண்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்தார். எனினும், அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் குறித்து விமர்சனம் எழுந்து வந்தது.
ராகுல் விக்கெட் கீப்பர் ஆனார்
இடையே கேஎல் ராகுல் ஒரு போட்டியில் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவரது விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருக்கவே அவரை நிரந்தரமாக அணியின் விக்கெட் கீப்பராக மாற்றி விட்டார் கேப்டன் கோலி. ரிஷப் பண்ட் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
வாட்டர் பாய் பண்ட்
ரிஷப் பண்ட் இந்திய அணியில் மாற்று வீரராக பல போட்டிகளில் "வாட்டர் பாய்" வேலை செய்து வந்தார். அதை பலரும் விமர்சனம் செய்தனர். சமீபத்தில் முன்னாள் வீரர் முகமது கைஃப் ரிஷப் பண்ட் அணியில் ஒதுக்கப்படுவது குறித்து கோலி மீதான தன் விமர்சனத்தை முன் வைத்தார்.
கோலி பரிசோதனை
"அணித் தேர்வில் விராட் கோலி நிறைய பரிசோதனைகளை செய்கிறார். அவர் அப்படி செய்திருக்க வேண்டியதில்லை. கோலி நிறைய காம்பினேஷன் முயற்சி செய்கிறார். உலகக்கோப்பை தொடரில் அதிக அனுபவம் இல்லாத வீரர்களை கூட தேர்வு செய்தார்." என்றார் கைஃப்.
வீரர்களை ஆதரிக்க வேண்டும்
"சில வீரர்கள் போட்டிகளில் தங்கள் பார்மை இழந்தாலும், கோலி அவர்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். கோலி வீரர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவரால் நல்ல அணியை உருவாக்க முடியும்" என்றார் முகமது கைஃப்.
ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்
"விக்கெட் கீப்பர் இடத்திற்கு கூட அவர்கள் நிறைய வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய அணிக்கு நிரந்தரமான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் வேண்டும்." என ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் என அணியில் விக்கெட் கீப்பர்கள் மாறுவதை குறிப்பிட்டார் கைஃப்.
வாட்டர் பாயாக இருக்கக் கூடாது
"கேஎல் ராகுல் மாற்று விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும், முதன்மை விக்கெட் கீப்பராக அல்ல. தோனிக்கு மாற்றாக ரிஷப் பண்ட்டை வளர்க்க நினைத்தால், கோலி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர் அணியின் வாட்டர் பாயாக இருக்கக் கூடாது" எனவும் கைஃப் கூறி உள்ளார்.