13 வருடங்கள் அம்பயர்
இங்கிலாந்தை சேர்ந்த இயான் கோல்ட், ஐசிசியின் எலைட் அம்பயராக செயல்பட்டவர். 13 ஆண்டுகள் அம்பயராக பணியாற்றியுள்ள கோல்ட், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். 250 சர்வதேச போட்டிகளில் இவர் அம்பயராக இருந்து சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர். இந்நிலையில் இஎஸ்பிஎன் கிரிக்இன்போவிற்காக பேசிய இவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இயான் கோல்ட் பரவசம்
அம்பயராக சிறப்பான தருணங்களில் செயல்பட்டுள்ள இயான் கோல்ட், தனக்கு பிடித்தமான 3 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் என ஜாக்குவஸ் காலிஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை கைகாட்டியுள்ளார். இவர்களது ஆட்டங்களை பார்க்க தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் பார்க்கலாம்
ஜாக்குவஸ் காலிசின் ஆட்டத்தை ஒருநாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று கூறியுள்ள கோல்ட், இதேபோல தான் விராட் கோலியின் ஆட்டமும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை நமது ஆயுட்காலம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் அவரது ஆட்டம் அத்தகையது என்றும் கோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
இயான் கோல்ட் ஏக்கம்
ரிக்கி பாண்டிங் சிறப்பான கேப்டன் மற்றும் சிறப்பான மனிதர் என்று கூறியுள்ள கோல்ட், பெருமைக்குரிய ஆஸ்திரேலிய வீரரான பாண்டிங்கின் சிறப்பான ஆட்டத்தை காண்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றும், அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதை காண்பதற்கு தான் மிகுந்த ஆவலுடன் இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.