சர்ச்சை
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வுகளில் சர்ச்சை நிறைந்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான முரண்பாடு காரணமாக 28 வயதே ஆகும் பவுலர் முகமது அமீர் திடீரென ஓய்வை அறிவித்தார். அதே போல் பாகிஸ்தான் சீனியர் வீரர் வஹாப் ரியாஸ் கடந்த 2020 நியூசிலாந்து தொடருக்கு பின்னர் அணியில் வாய்ப்பு பெறவில்லை. இவர்கள் இருவரும் இல்லாததால் பாகிஸ்தான் அணி சமீபத்தில் மோதிய இங்கிலாந்து தொடரில் வெற்றி பெறவில்லை.
கண்டிப்பாக தேவை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கம்ரல் அக்ரம், முகமது அமீர் மற்றும் வஹாப் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு கூறியுள்ளார். அவர், முகமது அமீர் இன்னும் 4 -5 ஆண்டுகள் தான் கிரிக்கெட்டில் இருப்பார். வஹாப் ரியாஸுக்கு 2 - 3 ஆண்டுகளே உள்ளது. எனவே அவர்களின் அனுபவம் கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்கு தேவை. அவர்கள் போன்ற வீரர்கள் இந்தியா போன்ற களங்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள்.
கேப்டனாக இருங்கள்
அவர்கள் இருவரும் எவ்வளவு தேவை என்பது இங்கிலாந்து தொடரிலேயே பாபர் அசாமுக்கு புரிந்திருக்கும். பாபர் அசாம் ஒரு கேப்டன்சிப்பில் தன்னை மேம்படுத்தி வருகிறார். ஆனால் வீரர்கள் தேர்வில் சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டும். யோனஸ் கான், இன்சாமுல் அக் போன்றோர் உள்நாட்டு போட்டிகளில் நிறைய அனுபவம் உள்ளவர்களுக்கே வாய்ப்பளித்தனர். எனவே பாபரும் அதே முறையை பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் அது அணியை பாதிக்கும்.
பாகிஸ்தான் மீது காட்டம்
உலகக்கோப்பை போன்ற தொடருக்கு உள்நாட்டு போட்டிகளின் அனுபவத்தை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். உதாரணத்திற்கு பாபர் அசாம், ஹசன் அலி, இமாம் உல் அக் போன்றவர்கள் உள்நாட்டு போட்டிகளில் கலக்கி தற்போது சர்வதேச போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணி அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருவது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு சென்றுவிடுவார்கள் என அஞ்சுகிறதோ என்னவோ.. என கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.