துபாய்: சந்தேகத்துக்குரிய வகையில் பந்துவீசிய புகாரில், நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நியூசிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டி கொண்ட தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மூன்று ஓவர்களை வீசினார்.
எப்போதாவது தான் அவர் பந்துவீசுவார். அந்த வகையில் தான் அவர் பந்து வீசினார். அதிலும் அவருக்கு சிக்கல் வந்தது. போட்டியில் வில்லியம்சன் பந்துவீசிய முறை விதி மீறல் என நடுவர்கள் ஐசிசி இடம் புகார் தெரிவித்தனர். புகாரை ஐசிசி ஏற்றுக் கொண்டது. அவரது பந்துவீச்சை ஐசிசி சோதனை செய்திருக்கிறது.
நடுவர்களின் புகார் உண்மை என்று ஐசிசி தெளிவுபடுத்தி உள்ளது. அதன் காரணமாக வில்லியம்சன் பந்துவீச தடை யோ அல்லது அவரது பந்துவீச்சு முறையை சோதிக்க சோதனையும் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.