தரமான பார்ட்னர்ஷிப்
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் (77) - சுப்மன் கில் (50) என சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இதனால் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்ந்தது. ஆனால் இதன் பின்னர் இந்தியாவுக்கு கண்டம் ஏற்பட்டது. அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட் 15 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறியதால் 160 ரன்களுக்குள் 4 விக்கெட்கள் சரிந்து தடுமாறியது.
இமாலய இலக்கு
இதன் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்திய அணியை காப்பாற்றி கரை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 76 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்களை எடுத்து உறுதுணையாக நின்றார். கடைசி நேரத்தில் வந்த வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசியதால் 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது.
தொடக்கமே ஷாக்
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே ஆச்சரியம் தந்தனர் இந்தியாவின் இளம் பவுலர்கள். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் 22 ரன்களுக்கு வெளியேறினார். அறிமுக வீரர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் சிக்கி டெவோன் கான்வே (24) மற்றும் டேரில் மிட்செல் (11) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பெரிய ஏமாற்றம்
இதனால் இந்தியா வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அத்தனையும் பொய்யானது. 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடி இந்தியாவுக்கு ஆட்டம் காட்டினர். இந்திய பவுலர்கள் எவ்வளவு முயன்றும் கடைசி வரை அவர்களை பிரிக்கவே முடியவில்லை. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களை விளாசினார். மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களை குவித்தார்.
ரசிகர்களின் அதிருப்தி
இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பால் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1- 0 என முன்னிலையும் பெற்றது. 306 ரன்களை குவித்தும் இந்திய அணி தோற்றதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.