மகளிர் கிரிக்கெட் சர்ச்சை
மகளிர் கிரிக்கெட்டில் நவம்பர் மாதத்துடன் தற்காலிக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக் காலம் முடிந்தது. அவருக்கும், மூத்த வீராங்கனைக்கும் இருந்த மனக் கசப்புகள் பொது வெளிக்கு வந்து பெரிய சர்ச்சைகள் நடந்தேறின. அதனால், ரமேஷ் பவாருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கவில்லை.
அடுத்த பயிற்சியாளர் நியமனம்
அடுத்த பயிற்சியாளரை நியமிக்க கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட் மற்றும் ஷாந்தா ரங்கஸ்வாமி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இவர்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து, ராமனை பயிற்சியாளராக முன் மொழிந்தனர்.
கடும் எதிர்ப்பு
ராமனுக்கு பதவி நியமன கடிதத்தை அளிப்பதற்கு கிரிக்கெட் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர் ரமேஷ் பவாரை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ராமன் பயிற்சியாளராக பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டார்.
தனி மனிதரின் ஈகோ
இந்நிலையில் கபில் தேவ் இது பற்றி பேசியுள்ளார். "நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு தனி மனிதரின் ஈகோ நாட்டின் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது. ஒருவருக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம். ஆனால், மகளிர் அணியின் விருப்பத்தை விட பெரிது அல்ல" என கடுமையாக சாடியுள்ளார் கபில் தேவ்.
விண்ணப்பித்த முக்கிய நபர்கள்
கபில் கூறுகையில், "மகளிர் அணிக்கு யார் விண்ணப்பித்தார்கள் என பாருங்கள். இந்தியாவை உலகக்கோப்பை வெல்ல வைத்த கேரி கிர்ஸ்டன், இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத், அதிக டெக்னிகல் அறிவு கொண்ட, எல்லோராலும் மதிக்கப்படும் ராமன்" என்றார்.
அக்கறை இல்லை
இறுதியாக மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இவர்களை தேர்வு செய்வதில் பிரச்சனை என்றால் நிச்சயம் அந்த நபருக்கு இந்திய கிரிக்கெட் மீது அக்கறை இல்லை என்பதே உண்மை என விளாசியுள்ளார் கபில் தேவ்.