கிரிக்கெட் ஆலோசனை குழு பதவி
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நபர்கள் மூலம் வழி நடத்தப்படும் பிசிசிஐ, பயிற்சியாளர் நியமனம் செய்ய தனியாக கிரிக்கெட் ஆலோசனை குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழு தான் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்.
ரவி சாஸ்திரி நியமனம்
இந்த குழுவில் கபில் தேவ் தலைவர் பதவியிலும், சாந்தா ரங்கசாமி மற்றும் அன்ஷுமன் கெயிக்வாட் உறுப்பினர் பதவிகளிலும் உள்ளனர். இவர்கள் தான் சமீபத்தில் ரவி சாஸ்திரியை மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தனர்.
கபில் தேவ் மீது புகார்
இந்த நிலையில், இந்த குழுவில் இருக்கும் கபில் தேவ் மற்றும் சாந்தா ரங்கசாமிக்கு, சஞ்சீவ் குப்தா என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
என்ன புகார்?
அந்தப் புகாரில் கபில் தேவ் கிரிக்கெட் வர்ணனை செய்கிறார், கிரிக்கெட் மைதானங்களுக்கு விளக்குகள் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார்அதே போல, சாந்தா ரங்கசாமி, கபில் தேவ் இருவரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் பதவியில் உள்ளனர். எனவே, அவர்களது பிசிசிஐ பதவி செல்லாது என கூறப்பட்டு இருந்தது.
என்ன சிக்கல்?
பிசிசிஐ-யின் புதிய விதிகளின் படி, பிசிசிஐ பதவியில் இருக்கும் யாரும் ஆதாயம் பெறும் வகையில் வேறு ஒரு பதவியில் இருக்கக் கூடாது. பிசிசிஐ பதவியில் இருக்கும் அனைத்து முன்னாள் வீரர்களும் ஏதோ ஒரு வகையில் வேறு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
பதவி செல்லாது
அதன் படி பார்த்தால், எந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ நிர்வாகத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இதே கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இருந்த கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சாந்தா ரங்கசாமி ராஜினாமா
இந்த நிலையில், நோட்டீஸ் பெற்ற சாந்தா ரங்கசாமி, வெறுப்பில் கிரிக்கெட் ஆலோசனை குழு பதவி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கப் பதவி என இரண்டையும் ராஜினாமா செய்தார்.
கபில் தேவ் அதே முடிவு
தலைவர் பதவியில் இருந்த கபில் தேவ்வும் அதே முடிவுக்கு வந்துள்ளார். அவரும் தன் ஆலோசனை குழு பதவியை ராஜினாமா செய்து, "ஆளை விடுங்க" என தப்பித்துள்ளார்.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
இந்த இரட்டை ஆதாய விதியால் பாதிக்கப்பட்ட கங்குலி, லக்ஷ்மன் என பலரும் இந்த விதியை விமர்சித்து இருந்தனர். அனில் கும்ப்ளே கூறுகையில், பிசிசிஐ-யில் முன்னாள் வீரர்கள் பங்கேற்க வேண்டாம் என்றால் வேறு நபர்களை வைத்துக் கொள்ளுங்கள் என கூறி இருந்தார்.
ரவி சாஸ்திரி பதவி செல்லுமா?
தலைமை பயிற்சியாளர் பதவியில் ரவி சாஸ்திரியை நியமித்த கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ரவி சாஸ்திரியின் பதவி செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.