ஒன்றரை வருஷம் ஆச்சு
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக, 2019ம் ஆண்டு நவம்பரில், இந்தியாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு, கொரோனா காரணமாக உலகமே முடங்கியிருந்தாலும், அவ்வப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடிக்க தவறினார். சிலர், கோலியின் ஆக்ரோஷமே அவரது பேட்டிங் சரிவுக்கு காரணம் என்கின்றனர். அதுமட்டுமல்ல, பேட்டிங்கில் அவர் தடுமாறுவதால், ஸ்ப்லிட் கேப்டன்சி முறையை கையில் எடுக்க பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வேலைக்கு ஆகாது
இந்த நிலையில், மிட்-டேவுக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்த பேட்டியில், "நீங்கள் உண்மையிலேயே கோலியை கட்டுப்படுத்திவிட முடியுமா? அவர் எப்போதும் இயல்பான குணம் கொண்ட கிரிக்கெட்டர். ஆனால் இங்கிலாந்தில் அதிக ஆக்ரோஷமாக இருக்கக்கூடாது என்று நான் அவரை எச்சரிக்கிறேன். தான் ஆதிக்கம் செலுத்த வேண்டிய தருணங்களுக்காக அவர் காத்திருப்பதே நல்லது.
பொறுமை வேணும்
அவர் சற்று அமைதியாக ரன்களை சேகரிக்க வேண்டும். மிகவும் கடினமாக மற்றும் மிக விரைவாக ரன்கள் எடுக்க முயற்சிப்பது இங்கிலாந்தில் வேலை செய்யாது, அங்கு நீங்கள் பந்தின் மூவ்மெண்ட்டை காண வேண்டும். நீங்கள் ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சை திறம்பட பொறுமையாக விளையாடினால், இங்கிலாந்தில் உங்களால் வெற்றி பெற முடியும்" என்றார்.
இங்கிலாந்துக்கே வாய்ப்பு
மேலும், "இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணி கடுமையானது என்பதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உள்நாட்டில் விளையாடும்போது அவர்கள் ஒரு நல்ல அணி, எனினும், இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் சூழலுக்கு ஏற்ப தங்களை எப்படி தகவமைத்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து இங்கிலாந்தின் ஆட்டம் அமையும். ஸ்விங் மிகவும் பலனளிக்கும். அதேசமயம், அங்கு வெற்றிப் பெற இந்தியாவை விட இங்கிலாந்துக்கே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறன்" என கபில் கூறியுள்ளார்.