உலகக்கோப்பை வென்ற கபில் தேவ்
1983 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திச் சென்றவர் கபில் தேவ். அப்போது முதல் கபில் தேவ் புகழ் பெற்ற வீரராக வலம் வந்தார். அவர் 1978-79இல் இந்திய அணியில் இளம் வீரராக இருந்தார்.
அம்பயர் வெங்கடராகவன்
அப்போது இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன், அவர் சுழற் பந்துவீச்சாளர். இதை விட அம்பயர் வெங்கடராகவன் என்று சொன்னால் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும். அவரைக் கண்டு தான் கபில் தேவ் பயந்துள்ளார்.
கேப்டன்கள்
கபில் தேவ் இந்திய அணியில் அறிமுகம் ஆன போது பிஷன் சிங் பேடி அணிக்கு கேப்டனாக இருந்தார். சுனில் கவாஸ்கர் தலைமையில் நீண்ட காலம் ஆடி உள்ளார் கபில் தேவ். இதன் இடையே ஸ்ரீனிவாச வெங்கடராகவன் தலைமையிலும் ஆடி உள்ளார். வெங்கடராகவன் தான் கடினமான கேப்டன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் கபில் தேவ்.
கோபம்
வெங்கடராகவன் தலைமையில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார் கபில் தேவ். வெங்கடராகவன் கபில் தேவ் முகத்தை பார்த்தாலே கோபம் கொள்வாராம். அவர் இயல்பிலேயே அதிக கோபம் கொண்டவராம். இங்கிலாந்தில் போட்டிக்கு நடுவே விடப்படும் "டீ பிரேக்"கை குறிப்பிட்டு, இதை ஏன் "டீ மற்றும் காபி பிரேக்" என சொல்லக் கூடாது என வாக்குவாதம் செய்வாராம்.
மிகவும் பயப்படுவேன்
ஒரு சின்ன விஷயத்துக்கே இப்படி என்றால், வீரர்களிடம் எப்படி நடந்து கொள்வார்?. இது பற்றி கபில் தேவ் கூறுகையில், "நான் அவரைக் கண்டு மிகவும் பயப்படுவேன். அவர் ஆங்கிலம் மட்டுமே பேசுவார் என்று தெரியும். அடுத்து எப்போதும் கோபப்படுவார் என்பது தெரியும்" என்றார்.
நாட் அவுட் கொடுக்கும் போது..
மேலும், "அவர் அம்பயர் ஆன பின்னர் கூட நாட் அவுட் கொடுக்கும் போது பந்துவீச்சாளரை திட்டுவது போலத் தான் கொடுப்பார். நான் 1979இல் இங்கிலாந்து தொடரில் ஆடிய போது அவர் தான் கேப்டன். அவர் என்னை பார்க்காத மாதிரி இடமாக பார்த்து இருந்து கொள்வேன்" என்றார் கபில் தேவ்.
மூலையில் அமர்ந்த கபில் தேவ்
"இயல்பாகவே என்னை அவர் கண்டால் உடனே பொங்கி எழுந்து விடுவார். நான் ஒரு மூலையில் அமர்ந்து உணவு உண்பேன். ஏனெனில், நான் அதிகமாக சாப்பிடுவேன். அவர், இவன் என்ன சும்மா சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான் என்பது போல பார்ப்பார்" என்று தான் பயந்த கதையை கூறினார் கபில் தேவ்.
கேப்டனை கேள்வி கேட்டார்
அதன் பின் 1983இல் கபில் தேவ் கேப்டன் ஆனார். அவரின் கீழ் வெங்கடராகவன் ஆடினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றது இந்திய அணி. அங்கே கேப்டன் கபில் தேவ் பந்துவீச்சாளர்களை மாற்றுவதை கேள்வி கேட்டு அதிர வைத்துள்ளார் வெங்கடராகவன்.
ரவி சாஸ்திரி
வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் வேகப் பந்துவீச்சாளர்களைத் தான் அதிகம் பயன்படுத்த முடியும். அதன்படி வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி முடித்த பின் ரவி சாஸ்திரியை சுழற் பந்து வீச அழைத்துள்ளார் கபில் தேவ்.
திட்டுவார்
அப்போது சுழற் பந்துவீச்சாளரான வெங்கடராகவன் "நான் பந்து வீச முடியாது என சொன்னேனா? என அதிகாரமாக கேட்டுள்ளார். அப்போது யார் கேப்டன் என தான் குழப்பியதாகவும், தான் கேப்டனாக இருந்தாலும் கூட அவர் தன்னை திட்டுவார் என்று கபில் தேவ் கூறியது தான் இதில் உச்சகட்டம்.