டெல்லி: இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்றுத் தந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ், மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ். 1983ல் உலகக் கோப்பையை வென்றுத் தந்தவர். 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்களையும், 225 ஒருதினப் போட்டிகளில் 253 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1994ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். ஆனால், இந்த முறை அவர் விளையாடப் போவது கிரிக்கெட் அல்ல... கோல்ப்.
ஜப்பானில் அக்டோபர் 17 முதல் 19 வரை நடக்க உள்ள 2018 ஆசிய பசிபிக் சீனியர் கோல்ப் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய அணியில் கபில்தேவ் இடம்பெற்றுள்ளார்.
59 வயதாகும் கபில்தேவ், நொய்டாவில் நடந்த தேசிய சீனியர் கோல்ப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதனடிப்படையில், ஆசிய பிசிபிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். 2015ல் சீனாவில் நடந்த போட்டியின்போதும், இந்திய கோல்ப் அணியில் கபில்தேவ் இடம்பெற்றிருந்தார்.