அபாரம்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆஸ்திரேலியா தொடர் முதல் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டுப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அதே போல் இங்கிலாந்து தொடரிலும் தன் அபார ஆட்டத்தால் தலை சிறந்த வீரராக புகழப்படுகிறார்.
புதிய மைல்கல்
இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அங்கீகாரம்
அஸ்வின் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சாபா கரீம், அஸ்வினுக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம், பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒன்று. அவருக்கு இனிமேலாவது உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
வருத்தம்
ஆசியாவிற்கு வெளியில் அஸ்வின் ஒரு ஓவர் சரியாக வீசவில்லை என்றாலும் உடனே அவர் சில போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு உரிய மரியாதை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர், கடினமாக சூழ்நிலைகளில் உதவக்கூடியவர் என இந்திய அணிக்கு மட்டுமல்ல, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் புரிந்துள்ளது என சாபா கரீம் தெரிவித்தார்.
அஸ்வின் ரெக்கார்ட்
சர்வதேச அளவில் இதுவரை 77 டெஸ்ட், 111 ஒரு நாள், 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்வின் மொத்தமாக 603 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை எடுத்து 59 ரன்களை விட்டுக்கொடுத்ததே அவரின் சிறந்த பந்துவீச்சாகும். அஸ்வின் இன்னும் 11 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்பஜனை முந்துவார்.