இறுதிப்போட்டியில் தமிழக -கர்நாடக அணிகள் மோதல்
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டி சூரத்தின் லாலாபாய் கான்டிராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின.
5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள்
இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. கேப்டன் மணிஷ் பாண்டே அடித்த 60 ரன்கள் அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது. 45 பால்களில் இவர் 60 ரன்களை அடித்தார்.
35 ரன்களை குவித்த ரோஹன் கதம்
மணிஷ் பாண்டேவை அடுத்து 35 ரன்களை குவித்து ரோஹன் கதமும் அணியை முன்னெடுத்தார். இதேபோல தேவ்தத் பதிக்கல் 32 ரன்களையும் கே.எல் ராகுல் 22 ரன்களையும் அடித்தனர். 8 பந்துகளில் 17 ரன்களை அடித்து கருண் நாயரும் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தார்.
விஜய் சங்கர் -பாபா அபரஜித் பார்ட்னர்ஷிப்
இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்து அணியை முன்னோக்கி எடுத்து சென்றனர்.
கோப்பையை பறிகொடுத்த தமிழக அணி
கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், 179 ரன்கள் மட்டுமே எடுத்து தமிழக அணி கோப்பையை பறிகொடுத்தது. கடைசி பாலில் 3 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் தமிழக அணியின் முருகன் அஸ்வின் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
"மற்றவர் வெற்றியை கொண்டாட வேண்டும்"
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றினாலும், இந்த ஆண்டு இன்னும் அதிக சந்தோஷம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மற்றவர்களின் வெற்றியை கொண்டாடும் மனநிலையாலேயே கர்நாடக அணி வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மும்பையில் திருமணம்
மும்பையில் இன்று திருமணம் நடைபெறும் நிலையில், தனது திருமணத்திற்கு முன்தினம் இறுதிப்போட்டியில் விளையாடி, கோப்பையை கைப்பற்றியுள்ளார் மணிஷ் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.