விஜய் ஹசாரே தொடர்
விஜய் ஹசாரே தொடரில் பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் அணிகளும் பங்கேற்றன. இந்த தொடரில் குரூப் சுற்றில் தாங்கள் இடம் பெற்ற பிரிவில் முதல் இடம் பிடித்து இருந்தன கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள்.
இறுதிப் போட்டி
அடுத்து நடந்த அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. கர்நாடகா அணியில் ராகுல், மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, கருண் நாயர் என பல இந்திய அணி வீரர்களும் அபிமன்யு மிதுன், கௌதம் போன்ற திறமையான பந்துவீச்சாளர்களும் இடம்பெற்று இருந்தனர்.
நட்சத்திர தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணியிலும் இந்திய அணியில் ஆடிய பல நட்சத்திரங்கள் இடம் பெற்றனர். தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டார். அஸ்வின், முரளி விஜய், விஜய் ஷங்கர், வாஷிங்க்டன் சுந்தர் என பலமான அணியாகவே காட்சி அளித்தது.
முதலில் பேட்டிங்
தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. முரளி விஜய் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த இடத்தில் அஸ்வின் இறங்கி ஆச்சரியம் அளித்தார். ஆனால், அவரும் 8 ரன்களில் வெளியேற, பின்னர் பாபா அபாரஜித் மற்றும் முகுந்த் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர்.
இறுதியில் தடுமாற்றம்
முகுந்த் 85, அபராஜித் 66 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது.
மிதுன் ஹாட்ரிக்
கர்நாடகா பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். கர்நாடகா பந்துவீச்சாளர் ஒருவர் விஜய் ஹசாரே தொடரில் எடுக்கும் முதல் ஹாட்ரிக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மிதுன் 5, கௌஷிக் 2, ஜெயின் 9, கௌதம் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி காட்டிய ஜோடி
253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கர்நாடகா அணிக்கு படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் அளித்தார். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் 52, மயங்க் அகர்வால் 69 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வந்தனர்.
மழையால் தடை
23 ஓவர்களில் கர்நாடகா 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எட்டியது. அப்போது வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் போட்டி நடைபெறும் சூழ்நிலை ஏற்படாத நிலையில், விஜேடி முறைப்படி வெற்றி அறிவிக்கப்பட்டது.
கர்நாடகா வெற்றி
சேஸிங்கில் அதிரடியாக ஆடிய கர்நாடகா அணி விஜேடி முறைப்படி 60 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை மழை பெய்யாமல் போட்டி நடந்திருந்தாலும், தமிழ்நாடு அணி வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை.
காரணம் என்ன?
தமிழ்நாடு அணி பந்துவீச்சின் போது அனுபவம் வாய்ந்த அஸ்வினுக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. ராகுல் - அகர்வால் ஜோடியை பிரிக்க வேண்டும் என்ற சூழலில் அஸ்வினுக்கு கூடுதல் ஓவர்கள் வழங்காமல் சொதப்பினார் தினேஷ் கார்த்திக்.