சண்டிகர் -அருணாச்சல பிரதேச அணிகள் மோதல்
ஆந்திர மாநிலம் கடப்பாவின் கேஎஸ்ஆர்எம் மைதானத்தில் நடைபெற்ற அன்டர் 19 போட்டியில் சண்டிகர் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் சண்டிகர் அணியை தலைமையேற்று போட்டியில் பங்கேற்ற கேப்டன் கஷ்வீ கவுதம் 4.5 ஓவர்களில் எதிரணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
186 ரன்களை குவித்த சண்டிகர்
கடப்பாவில் நடைபெற்ற இந்த ஒருநாள் சர்வதேச போட்டியில் கஷ்வீ கவுதம் தலைமையில் சண்டிகர் அணி முதலில் களமிறங்கி விளையாடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது. இதில் விளையாடிய கேப்டன் கஷ்வீ கவுதம் 68 பந்துகளில் 49 ரன்களை குவித்தார். இதன்மூலம் தன்னுடைய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு அவர் காரணமாக இருந்தார்.
25 ரன்களுக்கு ஆல்-அவுட்
இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கி விளையாடிய அருணாச்சல பிரதேச அணியின் வீராங்கனைகள் கஷ்வீயின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர். தான் போட்ட 4.5 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து கஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை சேர்த்துக் கொண்டார். இந்த சாதனையை புரிந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமைக்கு அவர் ஆளாகியுள்ளார்.
முதல் இந்திய வீரர் அனில் கும்ப்ளே
ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை முன்னதாக கடந்த 1956ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஸ்பின்னர் ஜிம் லேக்கர் படைத்திருந்தார். இதையடுத்து கடந்த 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பௌலர் அனில் கும்ப்ளே இந்த சாதனையை படைத்தார்.
திணறிய அருணாச்சல வீராங்கனைகள்
தான் போட்ட முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கஷ்வீ, அடுத்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து போட்ட 3வது ஓவரில், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்த ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அருணாச்சல பிரதேச அணியை 12 ரன்களை மட்டுமே கொடுத்து சுருட்டினார். மொத்தமாக அந்த அணி 25 ரன்களே அடித்த நிலையில், சண்டிகர் அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8 பேர் டக் அவுட்
கஷ்வீயின் பந்துவீச்சில் எதிரணி வீராங்கனைகள் 8 பேர் டக் அவுட் ஆனார்கள். அதிலும் 4 பேர் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆனார்கள். அணியின் துவக்க வீராங்கனைகள் நபம் மார்த்தா மற்றும் நபம் பாரா இருவரும் 4 மற்றும் 3 ரன்களை அடித்த நிலையில், இத்திகா தியாகி என்ற வீராங்கனை இரட்டை இலக்கத்தை அதாவது 10 ரன்களை தொட்டார்.
|
"கஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகள்!"
நியூசிலாந்திற்கு எதிரான கடந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் சொதப்பலான ஆட்டங்களால் மனம் வெறுத்து போயுள்ள ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக இந்திய மகளிர், டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் போட்டியில் கஷ்வீ மேற்கொண்டுள்ள இந்த சாதனையை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.