விமர்சனங்கள்.. நெருக்கடிகள்
ஐபிஎல் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் கேகேஆர் அணி சிறப்பான துவக்கத்தை தந்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றதால் அந்த அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு அணியில் உள்ள இயான் மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
சிஎஸ்கேவிற்கு எதிராக வெற்றி
இதற்கு ஏற்றாற்போல கடந்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் சொதப்பினார். இந்நிலையில் சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல்லின் 21வது போட்டியில் கேகேஆர் தன்னை நிரூபித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கும் பாராட்டு கிடைத்துள்ளது.
3வது இடத்தில் கேகேஆர்
இதையடுத்து கேகேஆர் அணி ஐபிஎல் பட்டியலில் 3வது இடத்திற்கு ஆர்சிபியை முந்தி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக். ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் இருப்பார்கள் என்றும் கேகேஆர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் சுனில் நரேன் என்றும் தெரிவித்துள்ளார். 2 -3 போட்டிகளில் சரியாக விளையாடாதது பெரிய விஷயமில்லை என்றும் குறிப்பிட்டார்.
சுனில் நரேன் அபாரம்
நேற்றைய போட்டியில் சுனில் நரேன், சிஎஸ்கேவின் முக்கிய வீரர் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதேபோல திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்களை விளாசியுள்ளதற்கும் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். துவக்கத்தில் விளையாடிய வீரர்கள் சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.