3வது சர்வதேச ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதிலும், இந்தியாவிற்கு 316 என்ற கடுமையான இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி அளித்திருந்தது.
135 ரன்களை அடித்த வீரர்கள்
இந்த போட்டியில் நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்டு இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 135 ரன்களை விளாசினர். அணியின் நல்ல ஸ்கோருக்கு இவர்களது ரன்கள் உதவி புரிந்தன.
நிகோலஸ் பூரன் பெருமிதம்
மைதானத்தின் உள்ளே மட்டுமில்லாமல் வெளியேயும் தனக்கும் கேப்டன் கீரன் பொல்லார்டுக்கும் நல்ல புரிதல் உள்ளதாக நிகோலஸ் பூரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அப்பா போன்றவர்
கட்டாக்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றநிலையில், இதையடுத்து பேசிய நிகோலஸ் பூரன், பொல்லார்டு தனக்கு மூத்த சகோதரர் மற்றும் தந்தையை போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.
கைத்தூக்கி விட்ட பொல்லார்டு
தனக்கு 20 வயதானபோது, நடந்த விபத்தில் 6 மாதங்கள் நடமாடக் கூட முடியாமல் தான் கஷ்டப்பட்டபோது, தன்னை கைதூக்கி விட்டவர் கீரன் பொல்லார்டு என்று பூரன் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவித்த பூரன்
தனக்கு வாய்ப்பு வழங்கிய பொல்லார்டுக்கு, பூரன் நன்றி தெரிவித்துக் கொண்டார். தான் கிரிக்கெட்டிற்கு திரும்பியதிலிருந்து தனக்கு எல்லாமுமாக பொல்லார்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதை நோக்கி நடைபோடுகிறோம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்னும் சிறப்பான பல விஷயங்கள் வரவேண்டும் என்று தெரிவித்துள்ள நிகோலஸ் பூரன், ஒவ்வொரு நாளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.