துணை கேப்டன் பொல்லார்ட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் கீரன் பொல்லார்ட். கடந்த 4 போட்டிகளில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாடாத நிலையில், அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக தகுதி பெற செய்துள்ளார் பொல்லார்ட்.
குழிபறிக்கும் நண்பன் வேண்டாம்
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கங்களில் கடுமையான வார்த்தைகளை கொண்ட செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். தனக்கு ரகசியமாக குழிபறிக்கும் நண்பனை காட்டிலும், தன்னை வெளிப்படையாக வெறுக்கும் எதிரியே தன்னுடைய தேவை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் விவாதம்
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் கேப்டன்ஷிப் எஸ்ஆர்எச் வீரர் ஜேசன் ஹோல்டரிடம் கைமாறியது. இதை குறிப்பிடும்வகையில் பொல்லார்ட் இந்த செய்தியை வெளியிட்டாரா அல்லது 4 போட்டிகளில் விளையாடாமல் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மாவை குறிப்பிட்டுள்ளாரா என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ரசிகர்கள் கமெண்ட்
பொல்லார்ட் ரோகித் சர்மாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளதாகவும், பிளே-ஆப்பில் அவர் விளையாடுவதை தவிர்த்தால் அப்போதுதான் ரோகித்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் உண்மை நிலை தெரியும் என்றும் பலவாறாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.