2 ஆண்டுகள் கேப்டன்
கடந்த இரு ஆண்டுகளாக அஸ்வின் கேப்டன்சியில் செயல்பட்டு வந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கேப்டனாக அஸ்வின் புதிய முயற்சிகளை எடுத்தார், இருந்தாலும் அந்த அணி வெற்றிகளை குவிக்கவில்லை. அவரது சில முயற்சிகள் பாராட்டப்பட்டது.
பெரிய வெற்றிகள் இல்லை
அனாலும், 2018 ஐபிஎல் தொடரில் ஏழாம் இடமும், 2019 ஐபிஎல் தொடரில் ஆறாம் இடமும் மட்டுமே பிடித்தது பஞ்சாப் அணி. அதனால், உரிமையாளர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து சில முடிவுகளை செய்தனர்.
கேப்டன் பதவி
பயிற்சியாளர் பதவியில் இருந்து மைக் ஹெஸ்ஸனை நீக்கிய அந்த அணி, அடுத்து கேப்டன் பதவியில் இருந்து அஸ்வினை நீக்கப் போவதாக சில தகவல்கள் தெரிவித்தன. அது உண்மை தான் என அந்த அணியை சேர்ந்த சிலர் கூறி உள்ளனர்.
அடுத்தடுத்த பின்னடைவு
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நல்ல பார்மில் இருக்கும் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதுவே பெரிய பாதிப்பு என்ற நிலையில், கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இது அவரது இமேஜை பாதிக்கும் என கருதப்பட்டது.
அணியில் இல்லை
அதை விட மோசமாக அவரை அணியில் இருந்தே நீக்க உள்ளது பஞ்சாப் அணி. 7.6 கோடி ரூபாய்க்கு அஸ்வின் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஐபிஎல் விதிப்படி அதே விலைக்கு அவரை வேறு அணிக்கு விற்க முடியும். அதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது பஞ்சாப் அணி.
வாங்கப் போவது யார்?
அஸ்வினை வாங்க டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அஸ்வின் வேறு அணிக்கு சென்றாலும் அவரால் கேப்டனாக இருக்க முடியாது.
அடுத்த கேப்டன் யார்?
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடுத்த கேப்டனாக இந்திய அணியில் தற்போது துவக்க வீரராக ஆடி வரும் ராகுலை நியமிக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.