கடும் அதிர்வலை
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிறப்பாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இரங்கல்
அவரது மேனேஜர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்திற்கு பாலிவுட் மட்டுமின்றி, கிரிக்கெட் உலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.
தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி
மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஒரு நடிகர், தோனி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தவர், இளம் வயதில் ஏற்றிபாராத தற்கொலை செய்து கொண்டார் என்ற அடிப்படையில் இரங்கல் செய்திகளை கூறி வரும் நிலையில், முன்னாள் வீரர் கிரண் மோரே தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விக்கெட் கீப்பிங் செய்ய பயிற்சி
சுஷாந்த் சிங் ராஜ்புத் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார். அதில் தோனி போன்ற நடை, உடை பாவனை எல்லாம் கூட தோனியுடன் பேசி, பழகி கற்றுக் கொண்டு இருப்பார். ஆனால், தோனி போலவே விக்கெட் கீப்பிங் செய்ய சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார்.
நண்பர்கள்
முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் கிரண் மோரேவிடம் சுஷாந்த் சிங் ராஜ்புத் விக்கெட் கீப்பிங் குறித்த பயிற்சி எடுத்துக் கொண்டார். அப்போது நண்பர்கள் போல நெருக்கமாக பழகி உள்ளார். இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கிரண் மோரேவை கடுமையாக பாதித்துள்ளது.
அதிர்ச்சியான தருணம்
கிரண் மோரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது எனக்கு தனிப்பட்ட முறையில் அதிர்ச்சியான தருணம். தோனி கதாபாத்திரத்தில் நடிக்க சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன். நானும், அவரை அறிந்த யாரும் எப்படி இந்த அதிர்ச்சியில் இருந்து மீளப் போகிறோம் என தெரியவில்லை. சீக்கிரம் சென்றுவிட்டாய் நண்பா.. எனக் கூறி உள்ளார் கிரண் மோரே.