மாஸ்டர் பேட்ஸ்மேன்
கிரிக்கெட் உலகில் முதன் முதலில் மாஸ்டர் பேட்ஸ்மேன் என அழைக்கப்பட்டார் சுனில் கவாஸ்கர். அவரது தடுப்பாட்டம் மற்றும் டெக்னிகல் ஷாட்கள் அப்போது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்று இருந்தது. தன் காலத்தில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார்.
முக்கிய சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலில் 10,000 ரன்கள் குவித்தது, 34 சதங்கள் அடித்து அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் நீண்ட நாட்கள் முதல் இடத்தில் இருந்தது என பல முக்கிய சாதனைகளை செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
அச்சுறுத்தும் பந்துவீச்சை எதிர்கொண்டார்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சு மிகவும் பலமாக, அச்சுறுத்தும் விதமாக இருந்த போது அதை எதிர்கொண்டு ஆடியவர் சுனில் கவாஸ்கர். அதை எதிர்த்து ஆடித் தான் அவர் அத்தனை சதங்கள் குவித்தார். மேலும், அதே கால கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெப் தாம்ப்சன் - டெனிஸ் லில்லி ஜோடியும் வேகப் பந்துவீச்சில் மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
வலைப் பயிற்சியில் எப்படி?
களத்தில் ஜாம்பவான் ஆன சுனில் கவாஸ்கர் வலைப் பயிற்சியில் எப்படி செயல்படுவார்? வலைப் பயிற்சியில் பங்கேற்க எத்தனை ஆர்வமாக இருப்பார்? இந்த கேள்விகளுக்கு நம்ப முடியாத பதிலை சொல்லி இருக்கிறார் கிரண் மோரே.
கிரண் மோரே என்ன சொன்னார்?
"வலையில் நான் பார்த்ததிலேயே அவர் மோசமான வீரர்களில் அவரும் ஒருவர். அவருக்கு வலைப் பயிற்சி செய்யவே பிடிக்காது. அவர் வலைப்பயிற்சி செய்வதை பார்த்து விட்டு, அடுத்த நாள் டெஸ்ட் மேட்ச்சில் ஆடுவதை பார்த்தால் அது 99.9 சதவீதம் வேறு மாதிரி இருக்கும்.: என்றார் கிரண் மோரே.
இவர் எப்படி ரன் அடிப்பார்?
மேலும், "அவர் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்வதை பார்த்தால், இவர் எப்படி ரன் எடுக்கப் போகிறார்? என தோன்றும். ஆனால், அடுத்த நாள் காலை அவர் ஆடுவதை பார்த்தால் வியப்பாக இருக்கும்." என கவாஸ்கர் பேட்டிங் குறித்து தன் வியப்பை வெளிப்படுத்தினார் கிரண் மோரே.
கவனம்
"சுனில் கவாஸ்கருக்கு கடவுள் தந்த பரிசு கவனித்தல் தான். அவருடைய கவனிக்கும் திறனின் அளவு நம்ப முடியாதது. ஒரு நிலைக்கு அவர் சென்று விட்டால் யாரும் அவர் அருகில் நெருங்க முடியாது. அவர் யார் பேச்சையும் கவனிக்க மாட்டார். நாம் என்ன செய்தாலும், அவர் அவரின் கிரிக்கெட் மீதே கவனமாக இருப்பார்" என்றார் கிரண் மோரே.
கடும் கோபம்
அதே போல, சுனில் கவாஸ்கர் அதிக கோபம் கொள்வது பற்றியும் கூறினார் கிரண். டக் அவுட், அல்லது 5, 10 ரன்கள் எடுத்தாலும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாலும் கோபப்பட மாட்டார். ஆனால், ஒரு மணி நேரம் ஆடிய நிலையில், 30, 40 ரன்களில் ஆட்டமிழந்தால் கடும் கோபம் அடைவார் என்றார் கிரண் மோரே.