மீண்டும் பங்கேற்ற ரஸ்ஸல்
ஐபிஎல்லின் 54வது லீக் போட்டியில் நேற்று மோதிய கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக கடந்த 4 போட்டிகளில் பங்கேற்காத ஆன்ட்ரே ரஸ்ஸல் இந்த போட்டியில் பங்கேற்று 11 பந்துகளில் 25 ரன்களை குவித்தார்.
விரைவில் குணமடைந்த ரஸ்ஸல்
இவருடைய பங்களிப்பும் நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தன்னுடைய காயம் காரணமாக தான் 8 வாரங்களாவது ஓய்வு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இருந்த நிலையில் அணியின் மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் தன்னுடைய காயம் விரைவில் குணமாக காரணமாக இருந்ததாக ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
ரஸ்ஸல் மகிழ்ச்சி
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஸ்ஸல், மீண்டும் களத்தில் இறங்கி விளையாடியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 14 நாட்களாக காயத்துடன் போராடியது குறித்து அவர் கருத்துக்களை பகிர்ந்தார். மேலும் தன்னுடைய அணியில் பௌலிங் சிறப்பாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
4வது இடத்தில் கேகேஆர்
நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் தான் ஒரு பார்மிற்கு வந்தபோதே அவுட் ஆகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணி தற்போது ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.