சொதப்பிய கேகேஆர்
சென்னை அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. குறிப்பாக 90 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் அந்த அணிக்கு இந்த சீசன் முழுவதுமே இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை இறுதிப்போட்டியிலும் காலை வாரிவிட்டது.
பெரும் ஏமாற்றம்
அமீரக பாகத்தில் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் - ஷுப்மன் கில்லின் சிறப்பான பேட்டிங்கால் தான் அந்த அணி ஃபைனல் வரை சென்றது. இறுதிப்போட்டியில் அவர்கள் அவுட்டானதும், மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் படுமோசமாக சொதப்பினர் தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா போன்ற வீரர்கள் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.
மிடில் ஆர்டர் பாதிப்பு
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் மட்டும் இருந்திருந்தால், ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என கருதப்படுகிறது. காயம் காரணமாக இடையில் சில போட்டிகளில் ஆடாத நிலையில், இறுதிப்போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் ஆடவில்லை. அவர் ஆடாதது கேகேஆர் அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.
ரஸல் ஏன் பங்கேற்கவில்லை
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் ஏன் விளையாடவில்லை என கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாகத்தான் ஆடவில்லை. அவர் காயத்திலிருந்து மீண்டுவர மிகக்கடுமையாக உழைத்தார். ஆனாலும் அவரை ஆடவைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. கடைசியாக, நன்றாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அதே அணியுடன் சென்னையை எதிர்கொள்ள முடிவெடுத்தோம் எனக்கூறினார்.