ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்.19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இன்று (செப்.23) ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரைன் ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 14 ரன்களில் ஃபெர்கியூசன் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். பிறகு பொல்லார்ட் 21 ரன்களும், க்ருனால் பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில், ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். ஆனால், அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள் பறந்தன. கில் முதல் சிக்ஸர் அடிக்க, பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் இரண்டாவது சிக்ஸரை விளாசினார். போல்ட் ஓவரில்.. அதுவும் முதல் ஓவரில் இரண்டு சிக்ஸர் பறப்பது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் எனலாம்.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
இந்நிலையில், கில் 13 ரன்களில் அவுட்டானாலும், வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களை விட்டு விளாசினார். 11 பந்துகளுக்கெல்லாம் 30 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்து போல்ட் வீசியது தான். ஆனால் அந்த பந்து வந்த வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் சிக்சருக்கு பறந்தது தான் ஆச்சர்யம். கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ அவரிடம் இல்லை. தேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரரைப் போல விளையாடினார். இந்நிலையில், அவர் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.