மூன்றாவது வீரர்
கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி முதல் ஆளாக பாதிக்கப்பட, அதே அணியில் அடுத்தடுத்து 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் மூன்றாவது வீரராக பாதிக்கப்பட்டவர் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட். கடந்த மே 8ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாக மருத்துவக் குழு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது.
2 வார சிகிச்சை
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து அயல்நாட்டு வீரர்களும் நாடு திரும்பிய நிலையில் ஒருசில வீரர்கள் மட்டும் கொரோனாவால் இந்தியாவில் சிக்கியிருந்தனர். அதில் டிம் செய்ஃபெர்ட்-ம் ஒருவர். எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு வீரியம் பெரியளவில் இல்லை.
நெகட்டீவ்
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த செய்ஃபெர்ட் தற்போது பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து அவரை எப்படி தாய்நாட்டிற்கு அனுப்புவது என்ற பேச்சுவார்த்தையில் கொல்கத்தா அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
வாய்ப்பு போனது
கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் சிறப்பாக ஆடிய டிம் செய்ஃபெர்ட், இந்தாண்டு அணியில் தக்கவைக்கப்பட்டார். எனினும் இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் சும்மாவே உட்கார்ந்திருந்த போதும் கொரோனா தாக்கியதால் அவருக்கு இந்தியாவுடனான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.