31 போட்டிகள்
இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
சிஎஸ்கே 2வது இடம்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. தற்போது சிஎஸ்கே 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன.
சொதப்பும் மோர்கன்
இந்த புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்திலும், மும்பை அணி 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் 6 புள்ளிகளுடன் முறையை 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 7வது இடத்திலும், 2 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் கடைசி இடத்திலும் உள்ளன. இதில், கொல்கத்தா அணியை பொறுத்தவரை, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற வேண்டுமெனில், வரவிருக்கும் 7 போட்டிகளில், கண்டிப்பாக 6 போட்டிகளிலாவது வெற்றிப் பெற்றே தீர வேண்டும். கேப்டன் இயன் மோர்கன், இங்கிலாந்து அணிக்கு முதன் முதலாக உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவர் என்றாலும், டி20 போட்டிகளில் அவரது கேப்டன்ஷிப் இதுவரை பெரியளவில் எடுபடவில்லை.
ஜெயிப்பதே முக்கியம்
தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் சரியில்லை என்று தான், அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி, மோர்கனை கேப்டனாக்கினார்கள். ஆனால், கார்த்திக்கே பரவாயில்லை என்பது போல் உள்ளது மோர்கனின் கேப்டன்ஷிப். எனினும், அவர் மீண்டும் வலிமையாக கம்பேக் கொடுக்கலாம். இந்நிலையில், துபாயில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் கொல்கத்தா அணி, சிக்ஸர்கள் மட்டும் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை கொல்கத்தா நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது, கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி போன்ற பவுலர்களும் சிக்ஸர்கள் விளாசினார்கள். எத்தனை சிக்ஸர்கள் அடித்தாலும், போட்டியில் ஜெயித்தாக வேண்டும். இதனை கொல்கத்தா மனதில் கொள்ள வேண்டும்.
மோசமான தோல்வி
ஏனெனில், இந்தியாவில் நடந்த முதல் பாதி தொடரில், கொல்கத்தா அணி சாதாரண டார்கெட்டுகளை கூட எட்ட முடியாமல் மோசமாக தோல்வி அடைந்து கொண்டிருந்தது. அந்த அணியின் பவர் ஹிட்டர் ஆந்த்ரே ரஸலால் கூட ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றனர். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கொல்கத்தா தோல்வியடைந்தது. இதனால் கடுப்பான உரிமையாளர் ஷாருக்கான் அணியை வீரர்களை கடிந்து கொண்டதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில், இத்தனை மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் கொல்கத்தா பிளே ஆஃப் முன்னேறுகிறதா என்று பார்க்கலாம்.