மிரட்டிய கொல்கத்தா
2019 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் எதிரணிகளை மிரட்டிய அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் அதிரடியில் வெளுத்துக் கட்டினர். அதிலும் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியின் உச்சமாக இருந்தார்.
இந்த ஜோடி இல்லை
எனினும், கொல்கத்தா அணி டெல்லி கேபிடல்ஸ் போட்டியில் தோல்வி அடைந்தது. கடந்த போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு துவக்கம் அளித்து வந்த சுனில் நரைன் - கிறிஸ் லின் ஜோடி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
துவக்க வீரர்கள் யார்?
அவர்களுக்கு பதில் டென்லி - ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் டென்லி ரன் ஏதும் எடுக்காமல் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும், ஷுப்மன் கில் 65 ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
முக்கிய வீரர்கள்
கிறிஸ் லின் - சுனில் நரைன் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை என கூறப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், "லின், நரைன் இருவரும் முக்கிய வீரர்கள். அவர்கள் இல்லாமல் ஆடுவது நல்ல விஷயம் இல்லை. ஆனால், ஷுப்மன் கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பிடித்துக் கொண்டார்" என்றார்.
ராஜஸ்தான் போட்டி
கிறிஸ் லின், சுனில் நரைன் ராஜஸ்தான் போட்டியில் 140 ரன்கள் இலக்கை 14 ஓவர்களில் எட்ட முக்கிய காரணமாக அமைந்தனர். அப்படிப்பட்ட வீரர்கள் இல்லையே என தோல்விக்கு காரணம் கூறி புலம்பியுள்ளார்.