கொல்கத்தா பேட்டிங்
பஞ்சாப் அணி முதல் 16 ஓவர்களில் 153 ரன்கள் கொடுத்து இருந்தது. அப்போது களத்தில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸ்ஸல், அரைசதம் அடித்த நிலையில் உத்தப்பா ஆடி வந்தனர்.
ரஸ்ஸல் பௌல்டு அவுட்
அடுத்த 4 ஓவர்களில் ரஸ்ஸல் களத்தில் நின்றால் பெரிய அளவில் ரன் குவிப்பார் என்பதால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டிய சூழலில், 17வது ஓவரின் கடைசி பந்தில், ஷமி பந்துவீச்சில் ரஸ்ஸல் பௌல்டு அவுட் ஆனார்.
நோ பால்
ஆஹா.. என பஞ்சாப் அணி துள்ளிக் குதித்த போது, அம்பயர் நோ பால் என அறிவித்தார். இது நோ பால் இல்லையே, ஷமி சரியாகத்தானே காலை கிரீஸுக்குள் வைத்தார் எனப் பார்த்தால், பீல்டிங்கில் செய்த சொதப்பலால் நோ பால் என கூறப்பட்டது.
நான்கு பீல்டர்கள் எங்கே?
மைதானத்தின் உள்வட்டத்துக்குள் நான்கு பீல்டர்கள் நிற்க வேண்டும். ஆனால், அந்த பந்தை வீசிய போது மூன்று பீல்டர்கள் மட்டுமே நின்றுள்ளனர். இது எப்படி நடந்தது என தெரியாத நிலையில், ரஸ்ஸல் விக்கெட் வாய்ப்பு பறிபோனது.
எட்டு பவுண்டரி
இந்த தவறு நடந்த கையோடு, ஆண்ட்ரே ரஸ்ஸல் அடுத்த ஓவரில் ஆரம்பித்து தொடர்ந்து தான் சந்தித்த எட்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். 18வது ஓவரில் 22 ரன்கள், 19வது ஓவரில் 25 ரன்கள் எடுத்து தெறிக்க விட்டார். அந்த ஒரு தவறால், பெரிய திருப்புமுனையை தவற விட்டது பஞ்சாப் அணி.
ரஸ்ஸல் அதிரடி
இந்தப் போட்டியில் 3 ரன்கள் அடித்து இருந்த போது ரஸ்ஸல், விக்கெட் பறிபோகும் வாய்ப்பில் இருந்து தப்பித்து, பின்னர் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியின் ஸ்கோர் 218-ஐ எட்ட பெரிதும் காரணமாக அமைந்தார் ரஸ்ஸல்.
அஸ்வின் சொதப்பல்
இந்த பீல்டிங் தவறுக்கு கேப்டன் அஸ்வின் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் போட்டியில் அணித் தேர்வு, பந்துவீச்சு தேர்வு, பீல்டிங் சொதப்பல் என கேப்டனாக பல சொதப்பல்களை செய்துள்ளார் அஸ்வின்.