நோ பால்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் 153-3 ரன்கள் எடுத்து இருந்தது. 17வது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ரஸ்ஸல் 3 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், அது நோ பால் என தெரிந்ததால், ரஸ்ஸல் தப்பிப் பிழைத்தார். மேலும், 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியை நொறுக்கித் தள்ளினார்.
நான்கு பீல்டர்கள்
அந்த பந்து நோ பால் ஆகக் காரணம் பீல்டிங்கில் சிறுபிள்ளைத்தனமாக பஞ்சாப் அணி செய்த ஒரு தவறு தான். 30 யார்டு உள்வட்டதுக்குள் நான்கு பீல்டர்கள் நிற்க வேண்டிய நிலையில், பஞ்சாப் அணியில் மூன்று பீல்டர்கள் மட்டுமே இருந்ததால், நோ பால் என அறிவிக்கப்பட்டது.
இருவரில் ஒருவர்
இந்த தவறை செய்தது பஞ்சாப் அணியில் நேற்று புதிதாக ஆடிய வருண் சக்கரவர்த்தி அல்லது வில்ஜோன், இருவரில் ஒருவர் தான் என கூறப்படுகிறது. யார் இந்தத் தவறை செய்தார் என தெரியவில்லை. ஆனால், புதிதாக வந்த வீரர் என்று தான் பலரும் குறிப்பிட்டனர்.
அந்த வீரருக்கு நன்றி
இந்த போட்டியின் முடிவில் ரஸ்ஸல் ஆட்டநாயகன் விருது வாங்கினார். பின்னர் பேசும் போது, "வட்டத்துக்கு வெளியே நின்ற வீரருக்கு நன்றி. அவர் புதிய வீரர், பெயர் மறந்துவிட்டது. உங்களுக்கு நன்றி" என குறிப்பிட்டு காமெடி செய்தார்.
பெரிய அறை
தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற ரஸ்ஸல், "நிறைய கார், இந்த விருதுகளை எல்லாம் வைக்க பெரிய அறை தயார் செய்ய வேண்டும்" எனவும் சந்தோஷமாக அலுத்துக் கொண்டார் ரஸ்ஸல்.
பந்துவீச்சிலும் அசத்தல்
நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் ரஸ்ஸல் சிறப்பாக செயல்பட்டார். 3 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.