விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்ப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி அபுதாபியில் இன்று நடைபெறவுள்ளது. தன்னுடைய முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கேகேஆரின் இந்த முதல் போட்டியில் அவர்களை தோற்கடிக்க வியூகம் அமைத்துள்ளது. இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கிடையில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேகேஆர் அணிக்கு பெருமை
இந்நிலையில், இந்த போட்டியையொட்டி கேகேஆர் அணியை பெருமைப்படுத்தும்வகையில் துபாயின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிஃபா கேகேஆரின் வீரர்கள் மற்றும் அந்த அணியின் வண்ணங்களான பர்ப்பிள் மற்றும் கோல்ட் வண்ணங்களை கொண்டு எல்இடி விளக்குகளை ஒளிரவிட்டது காண்பவர்களை மிகவும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நன்றி தெரிவித்த கேகேஆர்
இதையடுத்து இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேகேஆர் அணி, இந்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது. இதனிடையே, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை முதல் போட்டியிலேயே எதிர்கொள்வது மிகவும் சிறப்பானது என்று கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
போட்டி சிறப்பாக அமையும்
ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், மும்பை இந்தியன்ஸ் அணியில் உலக தரத்திலான வீரர்கள் உள்ளதையும் அவர்கள் 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இன்றைய போட்டி மிகவும் சிறப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் கேகேஆர் அணியை பலப்படுத்தும்வகையில் அந்த அணியில் இயான் மார்கன், பாட் கமின்ஸ், அலி கான், கிறிஸ் கிரீன் ஆகியோர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.