தவறு செய்தோம்
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் ராகுல், நாங்கள் ஏன் தோற்றோம் என்று அனைவருக்குமே தெரியும். இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம். களத்தில் நாங்கள் எங்களையே கைவிட்டுவிட்டோம். எங்கள் அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் உள்ள ஒரு வித்தியாசம், ரஜித் பட்டிதாரின் ஆட்டம் தான்.
இளம் அணி
அணியின் முன்வரிசையில் உள்ள வீரர்கள் இப்படி அதிரடியாக ஆடி கடைசி வரை நின்றால் அந்த அணி தான் வெற்றி பெறும். நாங்கள் புதிய அணி, அணியில் இருக்கும் வீரர்களுக்கு சராசரி வயதே 25 தான் இருக்கும். இதில் சிலர், அவ்வப்போது சில போட்டியில் நன்றாக விளையாடினர். மோசின் கான் தாம் ஒரு சிறந்த பவுலர் என்பதை அனைவருக்கும் காட்டி உள்ளார். அடுத்த சீசனில் இன்னும் பலமான பந்துவீச்சாளராக வருவார் என நம்புகிறேன் என்று கூறினார்.
டுபிளஸிஸ் பாராட்டு
இதனைத் தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ்,இது உண்மையிலேயே சிறந்த நாள். பட்டிடாரின் ஆட்டத்தை பார்த்து நான் மகிழ்ச்சியில் நிலாவுக்கு மேல் மிதப்பது போல் உணர்கிறேன். பட்டிடாரிடம் அனைத்து ஷாட்களை ஆடும் திறமையும் உள்ளது.நெருக்கடியான நிலையிலும், அவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார். எங்கள் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியான நிலையிலும் அமைதியாக செயல்பட்டனர்.
ஹர்சல் பட்டேல்
எப்போது எல்லாம் ஆட்டத்தில் எங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் ஹர்சல் பட்டேலிடம் தான் பந்தை வழங்குவேன். இது போன்ற சூழலில் பந்து வீச ஹர்சல் பட்டேலே விரும்புவார். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளித்தாலும் எங்கள் கவனம் எல்லாம் அடுத்த போட்டியில் தான் உள்ளது என்று டுபிளஸிஸ் கூறினார். இந்த நிலையில், தமக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 4 ஓவர் மட்டுமே வீச வேண்டும் என்பதால் சிக்கல் இல்லை என்று ஹர்சல் பட்டேல் கூறினார்.