5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நாளைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த 5 போட்டிகளும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடர் பூனாவில் நடைபெறவுள்ளது.
ரோகித் -கேஎல் ராகுல்
தொடர் நாளைய தினம் துவங்கவுள்ளதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் விராட் கோலி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நாளைய தினம் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கி ஆடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வீரராக ஷிகர் தவான் களமிறங்குவார் என்றும் கூறினார்.
இந்திய அதிரடி வீரர்கள்
தற்போது இந்திய பேடஸ்மேன்கள் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் விளையாடி வருவதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். நம்மிடம் அதிரடி வீரர்கள் பலர் இருப்பதாகவும் இந்த தொடருக்கு அதுதான் மிகவும் முக்கியமானது என்றும் கோலி மேலும் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பலம்
உலக அளவில் முன்னணியில் உள்ள இங்கிலாந்து அணியுடன் நாளைய தினம் மோதவுள்ளதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். மேலும் டி20 வடிவத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான பலத்துடன் செயல்பட்டு வருவதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.