கடைசி டெஸ்ட்
இந்த நிலையில் , மூன்றாவது டெஸ்ட் வரும் 11ஆம் தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த டெஸ்டில் முழு பலத்துடன் இந்தியா களமிறங்கினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை தோற்க அடிக்க முடியும்.
விராட் கோலி உடல்தகுதி
இதனால் விராட் கோலி கடைசி டெஸ்டில் விளையாடுவாரா என்று தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலியின் தசைப் பிடிப்பு பிரச்சினை சரியாகிவிட்டதாக கூறினார். அவர் 2 நாட்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும், முழு உடல் தகுதியுடன் இருப்பதால் கேப் டவுன் டெஸ்டில் கண்டிப்பாக விளையாடுவார் என்று தெரிவித்தார்.
முகமது சிராஜ் காயம்
இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்க்கு காயம் குணமடைந்து வருவதாக குறிப்பிட்ட கே.எல்.ராகுல், எனினும் மூன்றாவது டெஸ்டின் தொடக்கத்திலேயே அது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே அணியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வாய்ப்புக்காக காத்திருப்பதாக குறிப்பிட்ட ராகுல், மூன்றாவது டெஸ்டில் அவர்களில் யாரேனும் ஒருவர் களமிறங்குவார் என தெரிவித்தார்.
தோல்விக்கு காரணம்
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே முதல் இன்னிங்சில் சொதப்பியது தான் என்று குறிப்பிட்ட ராகுல், முதல் இன்னிங்சில் 50, 60 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும் என்று குறிப்பிட்டார். ஒரு நாள் ஓய்வு எடுத்து கொண்டு, மீண்டும் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.