வெற்றி நாயகன் கேஎல் ராகுல்
ஐபிஎல்லில் மட்டுமின்றி சமீப காலங்களில் இந்திய அணியிலும் தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளார் கே.எல் ராகுல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ராகுல், அந்த அணியின் வெற்றியில் சொல்லிக் கொள்ளும்படியாக செயல்படவில்லை என்ற போதிலும் தனிப்பட்ட வகையில் தன்னுடைய சிறப்பை நிரூபித்து வருகிறார்.
முதலிடத்தில் ராகுல்
இதுவரை இவர் விளையாடியுள்ள 9 போட்டிகளில், 525 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பிற்கு சொந்தக்காரராக உள்ளார். இந்த ரன்களின் சராசரி 75ஆக உள்ளது. மேலும் அவுட்டாகாமல் 132 ரன்களை ஒரு போட்டியில் அடித்துள்ளார். 5 அரைசதங்களையும் குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 135.65ஆக உள்ளது.
2018ல் 659 ரன்கள்
கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடி 593 ரன்களை 53.90 சராசரியுடன் ஆடியுள்ளார் ராகுல். இதன் ஸ்டிரைக் ரேட் 135.38. இந்த தொடரில் ஒரு சதத்தையும் 7 அரைசதத்தையும் அவர் அடித்து அதகளம் செய்தார். இதேபோல கடந்த 2018ல் 14 போட்டிகளில் 659 ரன்களை 158.41 ஸ்டிரைக் ரேட்டுடன் அடித்தார். அந்த தொடரில் அவுட் ஆகாமல் 95 ரன்களை அடித்தது அவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.
அதிகரித்துள்ள வேகம்
முன்னதாக ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள ராகுல், அந்த அணியிலிருந்து விலகி கடந்த 2018ல் இருந்து பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். பஞ்சாப் அணியில் இணைந்தவுடன் தான் இவருடைய போட்டியில் அதிக வேகம் காணப்படுகிறது. சிறப்பான செயல்பாடும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 500 ரன்கள்
கடந்த 2018ல் இருந்து ஐபிஎல்லில் 3 ஆண்டுகளாக 500 ரன்களை தாண்டி தன்னுடைய சாதனையை தொடர்ந்துவரும் ராகுல், இதுவரை 1777 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து ஷிகர் தவான், ரிஷப் பந்த் மற்றும் விராட் கோலி உள்ளனர். இந்த சீசனில் இன்னும் விளையாட வேண்டிய நிலையில், 525 என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.