தோனி இல்லை
இந்திய அணியில் தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் பங்கேற்கவில்லை. அவருக்கு அடுத்ததாக அணியின் விக்கெட் கீப்பராக வந்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட். அதுவரை ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என வாதாடிய ரசிகர்கள் அதன் பின் தலைகீழாக சொல்லத் துவங்கினார்கள்.
ரிஷப் பண்ட் ஏமாற்றம்
ஆம், ரிஷப் பண்ட் 2019 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் தொடங்கி தொடர்ந்து மோசமாக ஆடி வந்தார். ஒரு கட்டத்தில் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் பண்ட். எனினும், ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தொடர்ந்து நீடித்தார்.
மாற்று விக்கெட் கீப்பர் ராகுல்
இடையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் காயமடைந்தார். அப்போது அவருக்கு பதிலாக துவக்க வீரர் கேஎல் ராகுல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அப்போது அவரது கீப்பிங் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.
அதிரடி மாற்றம்
அத்துடன் ரிஷப் பண்ட் பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டார். கேஎல் ராகுல் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார். அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படும் முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
ராகுல் என்ன சொன்னார்?
இந்த நிலையில், தன் விக்கெட் கீப்பிங் பணி பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார் கேஎல் ராகுல். கர்நாடகா அணியிலும், ஐபிஎல் தொடரிலும் தான் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்து வந்ததை அனைவரும் அறிவார்கள். எப்போதும் விக்கெட் கீப்பிங் செய்து வந்தேன் எனக் கூறினார் ராகுல்.
அந்த பயம்
மேலும், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் போது பயமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் ரசிகர்களின் அழுத்தம் தான் எனவும் கூறினார். லேசாக பந்தை பிடிக்க தடுமாறினாலும், மக்கள் நீ தோனிக்கு மாற்று இல்லை என கூறி விடுவார்கள் என்றார்.
காரணம் என்ன?
ஜாம்பவான் தோனிக்கு பதிலாக வேறு ஒருவரை ஸ்டம்ப்புகளுக்கு பின் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் இத்தனை அழுத்தம் இருப்பதாகவும் கூறினார் ராகுல். ராகுல் ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியிலும் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.