தென்னாப்பிரிக்க டி20 தொடர்
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட பல வீரர்களும் ஓய்வில் இருக்கின்றனர். எனவே கே.எல்.ராகுல் தலைமையில், ஐபிஎல்-ல் கலக்கியவர்களை வைத்து புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிரச்சினை
இந்நிலையில் இந்த அணியில் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தொடக்கத்திலேயே புதிய குழப்பம் உருவாகியுள்ளது. அதாவது கேப்டன் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்கப்போவது யார் என்பது தான். இந்த ரேஸில் இளம் வீரர்கள் இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் என 3 பேர் உள்ளனர்.
கடும் போட்டி
இந்திய அணியில் நீண்ட நாட்களாகவே இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் இடையே போட்டி நிலவி வருகிறது. ஆனால் இதில் தற்போது வரை இஷான் கிஷான் தான் வெற்றி பெற்றுள்ளார். ருதுராஜுக்கு 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதுவும் தொடர்ச்சியாக இல்லை. எனவே இந்த தொடரிலாவது ருதுராஜுக்கு தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆல்ரவுண்டர்
இந்த பட்டியலில் வெங்கடேஷ் ஐயர் முக்கிய இடத்தை பிடிக்கிறார். இந்தாண்டு ஐபிஎல்-ல் அவர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், அவரின் சர்வதேச கிரிக்கெட் சிறப்பாக உள்ளது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளதால், இனி வெங்கடேஷ் ஐயரை ஓப்பனிங்கில் களமிறக்கி பார்ப்பார்கள். இது வெற்றிகரமாக இருந்தால், இந்திய அணிக்கு 2 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் கிடைத்துவிடுவார்கள்.