மும்பை: இப்போதைய நிலையில் இந்திய அணியில் 5வது இடத்திற்குப் பொருத்தமான வீரர் கே.எல். ராகுல்தான் என்று சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் சஞ்சய் மஞ்ச்ரேகர், கிரிக்கெட் வர்ணனையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து தனது கருத்துக்களைக் கூறி வருகிறார். இப்போது டிவிட்டரில் ஆக்டிவாக பல கேள்விகளுக்குப் பதில் கொடுத்து வருகிறார்.
அப்படி அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விதான். இந்திய அணியில் 5வது இடத்துக்கு யார் சரியாக இருப்பார் என்பது. அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஞ்ச்ரேகர்.
இதுகுறித்து ரசிகரின் கேள்விக்கு அவர் போட்டுள்ள டிவீட்டில், இப்போதைக்கு 5வது இடத்துக்கு சரியான வீரர் கே.எல். ராகுல் மட்டுமே. அவர்தான் சரியாக இருக்கிறார். ஆனால் சுரேஷ் ரெய்னா போல, யுவராஜ் சிங் போல இன்னொரு பேட்ஸ்மேனை தயார் செய்ய வேண்டும். ஏனென்றால் ராகுல் மேலே போக போக 5வது இடத்துக்கு வெற்றிடம் வந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் மஞ்ச்ரேகர்.
ராகுல் தற்போது நல்ல கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது அவர் நடுக்களவீரராக ஆடினார். அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அதே இடத்தில் அவர் ஆடினார். அதேபோல 4வது இடத்துக்கு சரியான வீரர் யார் என்ற கேள்விக்கும் மஞ்ச்ரேகர் பதில் கொடுத்துள்ளார். அதாவது ஷிரேயாஸ் அய்யர் அந்த இடத்திற்குப் பொருத்தமானவர் என்பது மஞ்ச்ரேகரின் பதிலாகும்.
ஆல்ரவுண்டரில் யார் சிறப்பாக உள்ளார் என்ற கேள்விக்கு ஹர்திக் பாண்டியா சரியான வீரராக இருப்பார் என்பது மஞ்ச்ரேகரின் கருத்தாகும். இவர்கள் எல்லாம் டி 20 உலககக் கோப்பைத் தொடருக்கு பொருத்தமானவர்கள் என்ற அர்த்தத்தில் பதில் கொடுத்துள்ளார் மஞ்ச்ரேகர். இது சஞ்சய் மஞ்ச்ரேகரின் கருத்தாகும். வாசகர்களாக நீங்க யாரைப் பொருத்தமானவர்னு சொல்றீங்க.. கருத்துக்களைப் பதிவிடலாமே.