டெல்லி : தொடர்ந்து பல தொடர்களை இடைவெளியின்றி ஆடிக்கொண்டிருந்த இந்திய அணியினர், தற்போது வீட்டில் அடைபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சிலர் வீட்டிலிருந்தபடியே வொர்க் அவுட் செய்தும், பல பயிற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை இனிமையாக செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் சமீபத்திய சூறாவளி கே.எல். ராகுல், தான் வீட்டில் என்னெவெல்லாம் செய்து வருகிறேன் என்பது குறித்து ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது சிறப்பாகவே உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் அடைபட்டுள்ளனர்.
தொடர்ந்து போட்டிகள், பயிற்சிகள், பயணங்கள் என்று சுற்றிக்கொண்டே இருந்த வீரர்களுக்கு வீட்டில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடும்பஸ்தர்களுக்கு கவலையே இல்லை. தங்களது குடும்பத்தினருடன் இனிமையாக அவர்கள் நேரத்தை போக்குகின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு இதுகுறித்து இருந்த குறையும் இதனால் தீர்ந்துள்ளது.
ஆனால் இதில் பேச்சிலர் வீரர்கள் தான் மிகவும் பாவமாக இருக்கிறார்கள். எவ்வளவு நேரம்தான் வீட்டிற்குள்ளேயே பயிற்சிகளை தொடர்வது என்று அவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. அவ்வப்போது, தங்களது பயிற்சி, டிக்டாக் வீடியோக்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சமீபத்திய நியூசிலாந்து பயணத்தில் சூறாவளியாக கலக்கிய கே.எல். ராகுல் தன்னுடைய ஓய்வை எவ்வாறு பயனுள்ளதாக கழிக்கிறார் என்று கட்டம்கட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் பேட்டால், பந்தை தட்டி விளையாடுகிறார், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார். மொபைல், ஐபேடை பயன்படுத்துகிறார். மேலும் புத்தகம் படிக்கிறார். அழகான பின்புலத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது.
View this post on InstagramMask o̸f̸f̸ ON! #stayathomechallenge
A post shared by KL Rahul👑 (@rahulkl) on
நியூசிலாந்து பயணத்தின், முதல் டி20 தொடரின்போது விளையாடிய ராகுல், 224 ரன்களை குவித்தார். இதேபோல சர்வதேச ஒருநாள் தொடரிலும் 204 ரன்களை எடுத்தார். இறுதிப்போட்டியில் அவரது முதல் சதம் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லை. இதேபோல தற்போது ஊசலாட்டத்தில் உள்ள ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ராகுல். அவர் தங்களுக்கு கோப்பையை கைப்பற்றித்தருவார் என்று அந்த அணி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.