லாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உலக சாதனையை படைக்க உள்ளார்.
உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கிறது. அதற்காக அமெரிக்கா வந்திருக்கிறது. புளோரிடாவில் முதல் டி 20 போட்டி நடக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ராகுல் 121 ரன்களை அடித்தால், சர்வதேச டி 20 அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமின் உலக சாதனையை தகர்ப்பார். பட்டியலில் கேப்டன் விராட் கோலி (27 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ராகுல் இம்மைல் கல்லை எட்டும் பட்சத்தில், சாதனை எட்டிய 7வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால், போட்டியில் இந்திய அணியின் வழக்கமான துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் உள்ளதால், ராகுல் இம்மைல் கல்லை எட்டுவது சிக்கல் தான்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் நடந்த போட்டியில் ராகுல் சதம் விளாசி அசத்தினார். அதுதவிர கடந்த ஐபிஎல் தொடர் முதல் உலக கோப்பை வரை சிறப்பாகவே விளையாடினார். அணிக்கு தேவையான இளம் வீரர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருக்கிறது.