தோனி இடத்திற்கான தேர்வு
முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை நேற்று மாலை அறிவித்துள்ளார். இதையடுத்து சர்வதேச போட்டிகளில் அவரது இடத்திற்கு சரியான தேர்வு குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு வருடங்களாக தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த நிலையில், அந்த இடத்தில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல், சஞ்ஜூ சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ரிஷப்பிற்கும் வாய்ப்பு வழங்கலாம்
இந்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு தன்னுடைய முதல் தேர்வு கே.எல் ராகுல்தான் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் நயான் மோங்கியா தெரிவித்துள்ளார். 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் அவருடைய கீப்பங் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், பேட்டிங்கிலும் அவர் மேம்பட்டு வருவதாகவும் மோங்கியா கூறியுள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்திற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீப் தாஸ்குப்தா கருத்து
மோங்கியாவின் கருத்தை முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தாவும் ஆமோதித்துள்ளார். டி20 போட்டிகளில் இருவருக்குமே வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் ஆனால் தன்னுடைய சாய்ஸ் கே.எல். ராகுல்தான் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல அவர் 2023 உலக கோப்பை வரையிலும் இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் மற்றும் 5வது பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும். இதுகுறித்து அவரிடம் தேர்வாளர்கள் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
3வது தேர்வு சஞ்ஜூ சாம்சன்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்எஸ்கே பிரசாத் கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல். ராகுல் தன்னை சரியானபடி நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த தொடரில் சஞ்ஜூ சாம்சன் இருந்தபோதிலும் அவர் 3வது தேர்வாகவே இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனும் விக்கெட் கீப்பிங் தேர்வில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.