3 ஐசிசி கோப்பைகள்
தோனியின் கேப்டன்சி மீது ரசிகர்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் அவர் பெற்றுக்கொடுத்த ஐசிசி கோப்பைகள் தான். 2007ல் ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தவர். இவரின் இடத்தை தற்போது விராட் கோலி நிரப்பி வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த கருத்து
இந்நிலையில் தோனி குறித்து தொடக்க வீரர் கே.எல்.ராகுல் பாராட்டி பேசியது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர், கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருப்பார். தோனிக்கு கீழ் நாங்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளோம். அவரின் கேப்டன்சியில் பல்வேறு கோப்பைகளையும், சாதனைகளையும் படைத்துள்ளோம். ஆனால் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றியே சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான். தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக்கொள்வோம். யோசிக்கக்கூட மாட்டோம் எனத்தெரிவித்தார்.
இணையத்தில் போர்
கே.எல்.ராகுல் கூறிய கருத்து தோனி ரசிகர்களை பூரிப்படைய செய்தாலும், மற்றொரு புறம் கோலி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. தோனி சக வீரர்களுக்கு மரியாதை கொடுத்து, மனதில் உயர்ந்து நிற்கிறார் என்றால், விராட் கோலி அப்படி செய்வதில்லையா? சிறந்த கேப்டன் கிடையாதா? கோலியை மறைமுகமாக விமர்சனம் செய்கிறீர்களா? என சமூக வலைதளங்களில் கே.எல்.ராகுலை திட்டித்தீர்த்துள்ளனர். மறுபுறம் ராகுலுக்கு ஆதரவாக தோனியின் ஆதரவாளர்கள் களமிறங்கியதால், தற்போது இணையத்தில் தோனி - கோலி ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.
அதிருப்தி
தோனி கேப்டனாக இருந்த போது அறிமுகமான கே.எல்.ராகுல் விராட் கோலியின் கேப்டன்சியில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார். எனினும் தற்போது ராகுலுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்ற அவருக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கில்-க்கு காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் ப்ரித்வி ஷாவை அழைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனவே தனது அதிருப்தியின் வெளிப்பாடாகவே ராகுல் இப்படி பேசினாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.