3வது டி20 போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தற்போது டி20 போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5 போட்டிகளும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறவுள்ளது. முதல் 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்துள்ளன.
ரோகித் சர்மா பங்கேற்பு
இந்நிலையில் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, கடந்த இரு போட்டிகளில் குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில் இன்றைய போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுலுக்கு பதிலாக ரோகித்
கடந்த இரு போட்டிகளில் விளையாடிய துவக்க வீரர் கேஎல் ராகுல் 1 மற்றும் 0 மட்டுமே எடுத்து அவுட்டானார். இதையடுத்து அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் விக்கெட் கீப்பர் பொறுப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ள நிலையில், ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிடில் ஆர்டரில் ராகுல்?
துவக்க வீரராக கடந்த போட்டியில் களமிறங்கி இஷான் கிஷன் சிறப்பான பேட்டிங்கை அளித்துள்ள நிலையில், ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் துவக்க வீரராக இன்றைய போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து துவக்க வீரர் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் அல்லது அடுத்த ஆர்டரில் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.
சூர்யகுமாருக்கு வாய்ப்பு பறிப்பு?
கடந்த சில போட்டிகளில் அவர் சிறந்த கேம் பினிஷராக செயல்பட்ட நிலையில் அவருக்கு போட்டியின் மிடில் ஆர்டரில் வாய்ப்பளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வாய்ப்பளிக்கப்பட்டால் கடந்த போட்டியின்மூலம் அறிமுகம் ஆகி ஆனால் ஆட வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார் யாதவிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகிவிடும்.
மார்க் வுட் சேர்ப்பு
இதேபோல கடந்த போட்டியில் பௌலிங்கில் சொதப்பிய இங்கிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இன்றைய போட்டியில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் பௌலிங்கில் இங்கிலாந்து சொதப்பிய நிலையில் தற்போது இந்த மாற்றம் அவர்களுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.