கலக்கிய அறிமுக வீரர்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய க்ருணால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கர்நாடகாவை சேர்ந்த பிரசித் கிருஷ்ணா தனது முதல் போட்டியிலேயே 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
கேஎல் ராகுல் பாராட்டு
இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து அடுத்த வீரராக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வழங்குவார் என்று தான் எதிர்பார்த்ததாக கேஎல் ராகுல் கூறியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த ராகுல், தனக்கு அடுத்ததாக பிரசித் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று முன்னமே அறிந்திருந்ததாக கூறியுள்ளார்.
ஜூனியர் போட்டிகளில் சிறப்பு
பிரசித் கிருஷ்ணா கடந்த போட்டியில் செய்த அதிரடி பௌலிங் தனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை என்றும் கடந்த ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் நெட் பயிற்சிகளிலும் இதை தான் உணர்ந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரசித் கிருஷ்ணா உயரமாக இருப்பதால் பவுன்ஸ் பந்துகளை சிறப்பாக கையாள்வதாகவும் கூறியுள்ளார்.
கற்கும் விருப்பம்
கடந்த இரு சீசன்களில் பிரசித் கிருஷ்ணாவுடன் சேர்ந்து விளையாடியதில் அவர் மிகவும் துணிச்சலான வீரர் என்பதும் தனக்கு தெரியவந்ததாக ராகுல் கூறியுள்ளார். அவர் போட்டி குறித்து அதிகமாக அறிந்துள்ளதாகவும் தொடர்ந்து கற்கும் விருப்பம் அவரிடம் உள்ளதாகவும் முதல் போட்டியில் பந்துவீச அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.